Showing posts with label WCSC. Show all posts
Showing posts with label WCSC. Show all posts

Friday, March 11, 2011

Healing for the Souls


இயற்கை அன்னையினால் பாதிக்கப் பட்ட அனைத்து ஆத்மாகளும் இளைபாற இதை படிப்பவர்கள் இரண்டு நிமிடம் அமைதியாக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.


Sunday, November 28, 2010

அறுசுவை


சுவைகளில் ஆறுவகை சொல்லப்படுகின்றன.  அவை துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாகும்.  சுவை என்பது ஒன்றே. எனினும் உடலில் காந்த சக்தி சுவையாக மாறி எழுச்சி பெற்று இயங்கும்போது, அதனுடைய செலவாகும் அளவையும், பரிணாமத்தையும் பொறுத்து அதை ஆறு பிரிவுகளாக பகுத்துக் காண்கிறோம்.

முதலில், ஒர் அணுவில் ஐந்து மாத்திரை அளவான காந்த சக்தி சுவையாக எழுச்சி பெற்று இயங்குகின்றது எனக் கொள்வோம். அது முதன் முதலில் துவர்ப்பு என்னும் நிலையில் இருக்கிறது. அதுவும் ஒன்று முதல் ஐந்து வரை சுவையாகச் செலவாகும் சக்தியின் அளவுக்கேற்ப துவர்ப்பு சுவையிலேயே, அளவில் பல வித்தியாசம் உண்டாகிறது.

அதற்கு மேல் ஆறு முதல் பத்து மாத்திரை வரையில் காந்த சக்தி சுவையாக எழுச்சி பெற்றால், அது கைப்பு என்னும் சுவையாக மாறுகின்றது.  இவ்விதம் ஐந்தைந்து மாத்திரை அளவு சக்தி அதிகமாக செயல்பட, அது மேலும் முறையே கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாக எழுச்சி பெறுகின்றன.  ஆகவே ஆறு சுவைகள் என்பது காந்த சக்தியின் ஏற்றத்தாழ்வு நிலைகளே அன்றி ஒவ்வொன்றும் தனித் தனியானது அல்ல.


உடலில் உடல் அமைப்பில் ஆறு சுவையும் இருக்கின்றன.  கூடுதல் குறைவாக இருக்கலாம்.  ஆனால் ஆறு சுவையும் இருக்கின்றன.  உடலின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சுவை அதிகமாக இருக்கலாம்.  தேள் கொட்டினால் தேளின் விஷமாகிய ரசாயனம் உடல் முழுவது கைப்புச் சுவையாக அதிகரித்து விடுகிறது.  அதனால் உடலின் அணு அடுக்கில் குழப்பம் மிகுதிப்பட்டு உடலுக்கும் உயிருக்கும் பொருந்தாமை ஏற்பட்டு விடுகிறது.  அதே போல் பாம்புக் கடியினால் உடலில் கார்ப்பு சுவை அதிகரித்து விடுகிறது.

சுவையின் அளவு அதிகரிக்குங்கால், ஒன்று மற்றொன்றாகவும் அதில் முன்னிலையும் பின்னிலைக்குரிய மௌன எழுச்சியும் அடக்கம் பெற்றே இருக்கிறது.  ஆகவே எந்த ஒரு சுவையிலும் ஆறுவைக அடங்கியும், அவற்றில் அதிகமாக மீறி நிற்பதே புலனுணர்ச்சிக்கு உணர்வாகவும் இருக்கிறது

Saturday, November 20, 2010

ரமணரின் கர்மயோகம்


ரமணரிடம் ஒருவர் கேட்டார், கர்மயோகி யார்?

அதை விளக்குவதை விட, உணர்த்துவதே மேல் என அவர் எதையும் சொல்லவில்லை. நடந்து வரும் வழியில் ஒரு கருவேலமரத்தின் முட் கிளை கீழே விழுந்து கிடந்தது. ரமணர் அதை எடுத்தார். முட்களைச் சீவினார். அதை வழுவழுவென மென்மையாக்கிவிட்டார். அதைக் கையில் பிடித்தபடி மெதுவாக நடந்தார். வழியில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டார். அவன் தன் கையிலிருந்த கம்பை அங்குள்ள பள்ளத்தாக்கில் தவற விட்டு கவலையோடிருந்தான். இதை அறிந்த ரமணர் தனது கையிலிருந்த கம்பை அவனிடம் தந்தார். அவன் மகிழ்ச்சியோடு ஆடுகளை ஓட்டிச் சென்றான்.

இதுதான்,

கடமையைச் செய்
பலனை எதிர்பாரதே என்பது.
நாம் ஒவ்வொருவரும்,
நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ
எந்த அளவுக்குச் செய்ய முடியுமோ
எவ்வளவு பேருக்கு பலன் கொடுக்க முடியோமோ
அதையெல்லாம் செய்து வாழ்வதுதான்
நிறைவான வாழ்க்கை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அமைதியின் விளைவு தியானம்
தியானத்தின் விளைவு நம்பிக்கை
நம்பிக்கையின் விளைவு அன்பு
அன்பின் விளைவு சேவை
சேவையின் விளைவு மன அமைதி. -அன்னை தெரசா.

Friday, November 19, 2010

அன்பே கடவுள்


கடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் இழுக்கப்படுகிறோம். ஒரு பெண் தன் கணவனிடம் அன்பு செலுத்தினால் அவனிடமுள்ள கடவுளாகிய மகத்தான இழுப்பாற்றலே அவளை அன்பு செலுத்தத் தூண்டுகிறது. நாம் வழிபட வேண்டியது கடவுளாகிய இந்த அன்பு ஒன்றையே.

நாம் அவரை இந்த உலகைப் படைத்தவராகவும், காப்பவராகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் புறவழிப்பாட்டை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து சென்று, அவரை அன்பின் உருவாகாக் கொண்டு எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணுவதே பக்தி.


அன்பின் வகைகள்

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே.

அன்பில் 12 வகைகள் உண்டு.

1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு.

2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு.

3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.

4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.

5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.

6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.

7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.

8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.

9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.

10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.

11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.

12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகிற அன்பு.

அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம், நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும்.

Friday, October 1, 2010

நிலையானவை



அமைதி நிலையானது -  ஆர்ப்பாட்டம் செய்யும் வரை

விண்மீண் நிலையானது - இரவு முடியும் வரை

பூமி நிலையானது - பூகம்பம் வரை

வாலிபம் நிலையானது - வயோதிகம் வரும் வரை

தென்றல் நிலையானது - சூறாவளி வரும் வரை

பகல் நிலையானது - இரவு வரும் வரை

அழகு நிலையானது - முதுமை வரும் வரை

ஏழ்மை நிலையானது - செல்வம் வரும் வரை

குளிர் நிலையானது - வெப்பம் வரும் வரை

இன்பம் நிலையானது - துன்பம் வரும் வரை

வாழ்வு நிலையானது - மரணம் வரும் வரை

இன்று நிலையானது - நாளை வரும் வரை

இருள் நிலையானது - ஒளி வரும் வரை

சிரிப்பு நிலையானது - அழுகை வரும் வரை

ஊக்கம் நிலையானது - தளர்ச்சி வரும் வரை

Thursday, September 30, 2010

தியானம்


* இரவு பகலாகும் போது உள்ள நேரம் மிகப்பெரிய ஆற்றல் உள்ள நேரம். அந்த நேரங்களில் தான் தியானம் மிகவும் எளிதாகக் கை கூடிகிறது.

* தியானம் ஆழப்படப்பட உறக்கம் ஆழ்ந்து ஏற்படுகிறது.

* முயற்சியுடன் தியானம் செய்ய ஆரம்பித்தால் அந்த முயற்சியே ஆழமாகச் செல்வதைத் தடுத்துவிடும். ஆனால் தியானத்தின் சுவையை உணர்ந்து விட்டால் உறக்கமே தியானத்தின் திசைநோக்கி மெல்ல நகர ஆரம்பித்து விடும்.

* தியானம் மரணத்திற்கு ஒப்பானது. தியானம் ஒரு பக்கம் நம் இருப்பை உணரச்செய்கிறது. மறுபக்கம் நம் ஆணவத்தை கொன்று விடுகிறது.

* தியானம் ஆழமடைந்து விட்டதற்கான அடையாளம் ஆனந்தம். தியானம் ஆழ்ந்து செல்லச் செல்ல மகிழ்ச்சி ஆழமடையும் என்பது தர்க்கரீதியான உண்மை.


தியானத்தின் பயன்கள்

1. மனிதன் தன்னிடத்திலே உண்மையான வலிமையை வல்லமையை தேக்கி வைத்துக் கொள்ள உதவும் சாதனமாகவே தியானம் திகழ்கின்றது.

2.வாழ்க்கையில் ஏற்படுகின்ற தோல்விகளை, குழப்பங்களைச் சக்தியிழக்க செய்து சுலபமாக முன்னேற்றபாதை அமைத்து தருகின்றது தியானம்.

3.வாழ்க்கையில் எந்தத் துறையில் நாம் தொடர்பு கொண்டிருந்தாலும் அந்தத் துறையி ஆழ்ந்த பிடிப்பும், அக்கறையும், முழு மன ஈடுபாடும் கொண்டிருந்தால் படிப்படியான உயர்வினை கொடுப்பது தியானம்.
ஆதலினால் தியானிப்போம்.

Wednesday, September 29, 2010

சிந்தனைகள்











மிக மிக நல்ல நாள் -- இன்று

மிகப் பெரிய வெகுமதி -- மன்னிப்பு

மிகவும் வேண்டாதது -- வெறுப்பு

மிகப் பெரிய தேவை -- சமயோசித புத்தி

மிகக் கொடிய நோய் -- பேராசை

மிகவும் சுலபமானது -- குற்றம் காணல்

கீழ்த்தரமான விஷயம் -- பொறாமை

நம்பக்கூடாதது -- வதந்தி

ஆபத்தை விளைவிப்பது -- அதிகப்பேச்சு

செய்ய வேண்டியது -- உதவி

விலக்க வேண்டியது -- விவாதம்

உயர்வுக்கு வழி -- உழைப்பு

நழுவ விடக் கூடாதது -- வாய்ப்பு

Tuesday, September 28, 2010

கொடுங்கள் --> கொடுக்கப்படும்


“அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைக்கவில்லை?” என்று நீங்கள் கருதினால்,குறைந்தபட்சம் உங்கள் உடல் உழைப்பையாவது அடுத்தவர்களுக்கு தானாமாக கொடுங்கள்.

ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிக்கொண்டு போகிறோம். யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில் தான் நாம் வசதியாக வாழ்கிறோம். யாரோ நெய்த ஆடைகளைத்தான் நாம் கம்பீரமாக அணிந்து  கொள்கிறோம். யாரோ விளைவித்த தானியங்களைத்தான் சாப்பிடுகிறோம். சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் யாரோ செய்ததுதான்.

சமுதாயத்திலிருந்து இத்தனை விஷயஙளைப் பெற்றுக் கொள்ளும் நாம், சமுதாயத்துக்குப்பட்டிருக்கும் கடன்களை எப்படித் திருப்பி அடைக்கப் போகிறோம்? அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடுத்தவர்களுக்குத் தாராளமாக உதவி செய்யுங்கள். நீங்கள் அடுத்தவருக்கு உதவி செய்தால், ஆண்டவண் உங்களுக்கு உதவி செய்வார்.

Monday, September 27, 2010

ஆடு கொடுத்த சாபம்


கிராமக் கோயில்களில் ஆடுகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டின் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வர். கூடவே ஒரு கையில் ஆடு தின்னத்தக்க தழைகளை அதற்கு காட்டிக்கொண்டே செல்வர். அந்த ஆட்டுக்கு தனக்கு உணவகவுள்ள அந்த தழைகளைத் தவிர, நிகழ இருக்கிற பயங்கரம் தெரியாது! கோயில் வரை கொண்டு சென்று அதை அங்கு பலியிட்டு விடுவர்.

இருபதாயிரம் ஆண்டுகளாக வாழ்வின் அனுபவத்தை பார்த்துவிட்டு மனிதகுலம்,ஒருவரை ஒருவர் அழிப்பதற்காக இன்றும் உலகில் போர்
 செய்கிறான். இளமையும், துடிப்பும் மிக்க இளைஞர்கள் பலரைக் கூட்டி, பணத்தையும், உணவையும் காட்டி ஒன்று திரட்டி, கொலைக்களமாகிய போர்க்களத்தில் நிறுத்தி பலி கொடுக்கிறான். மனிதக்குலத்தை பிடித்த இந்த சாபம் என்று விடியும்?

Sunday, September 26, 2010

உடலமைப்பும் மக்கள் பிரிவும்


சமூகம் என்பது பல தனிமனிதர்கள் கூடிவாழும் அமைப்பு. இதில் அவரவர் எண்ணம், நடத்தை, அறிவு, செயல்பாடுகள், பக்குவம் இவற்றிற்கேற்ப மேல் மக்கள், நடுத்தர மக்கள், கீழ்மக்கள் என்று மூன்று பிரிவுகளில் பிரித்துக் கொள்ளலாம். 

கை கால்களைத் தவிர்த்துள்ள நம் உடம்பை மூன்றாகப் பிரித்துப் பார்த்தால் தொப்புளுக்குக் கீழே கீழ்ப்பகுதி காமம், குரோதம், ஆசை, சந்தோசம், வலி, வேதனை முதலியவற்றுக்குச் சொந்தமான பகுதியாகக் கருதப்படுகிறது. எவருக்கெல்லாம் இதில் வரம்பு மீறிய ஆர்வமும் தொடர்பும் உண்டோ அவர்களைக் கீழ்மக்கள் எனக்கருதலாம். 

தொப்புளுக்கு மேலே தொண்டைப் பகுதி வரை நடுப்பகுதி. இங்குள்ள உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து சேர்ந்து செயல்படும் தன்மை கொண்டவை. நேர்மை, உண்மை, இரக்கம், திருப்தி முதலியவற்றுக்ச் சொந்தமான பகுதி. இக்குணங்களைப் பெற்றவர்கள் நடுத்தரமக்கள். 

தலைப் பகுதியை அன்பு, அறிவு, நிதானம், தவம், அமைதி, ஆனந்தம், பரமானந்தம் உள்ளிட்டனவற்றிற்க்குச் சொந்தமான பகுதியாகக் கருதலாம். யார் இவற்றில் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் மேன்மக்கள் என்று கருதலாம்.

Wednesday, September 22, 2010

அகத்தவம்


 ”தியானம்” என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் “அகத்தவம்” ஆகும். உயிர் மீது மனதைச் செலுத்தி அமைதி நிலைக்கு வந்து அவ்வமைதியின் மூலம் சிந்தனையைச் சிறப்பித்து அறிவை வளப்படுத்தி வாழ்வில் நலம்காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சி தான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாத்தேவையாகும். இதனை மாணவ பருவத்திலேயே தொடங்குவது சாலச் சிறந்தது. பிரபஞ்சம் எனும் பேரியக்க மண்டலத்தைக் களமாகக் கொண்டு உடல்,உயிர்,அறிவு என்ற மூன்றும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு சிறப்பியக்க நிலையமே மனிதன். கருவமைப்பின் மூலம் வந்த முன்வினைப் பதிவுகளையும் அவற்றால் ஊக்குவிக்க்கப்பட்டு தற்போது நிகழும் பிறவியில் ஆற்றியுள்ள வினைப்பதிவுகளையும் அடக்கமாகப் பெற்று அவற்றின் வெளிப்பாடாகச் செயலாற்றி விளைவுகளைத் துய்த்து வாழும் உருவமே மனிதன்.

உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா ஊயிர்களிலும் சிறந்த, மேலான ஒரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக்காட்டும்,பிரதிப்பலிக்கும் கண்ணாடி மனிதனே.-------------அருள்தந்தை

~~~~~~~~~~~~~~
தவம்
~~~~~~~~~~~~~~
த : தத்துவம். நான் யார்? என்ற தத்துவத்தை உணர்தல்.
  
வ : வடிவம். தன்னை யாரென்று உணர்ந்தபிறகு அதுவாகவே வடிவம் எடுக்க வேண்டும். இறைவனை அரூபமாக உணர்ந்தபின், தானும் அதுவே என உணர்தல். கண்டத்திற்கு மேல் கருத்தைச் செலுத்தும்போது, அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என உணர்ந்து அதுவாகவே வடிவமெடுத்தல்.

ம் : பிரணவ ஒலி. எங்கும் எப்போதும் பிரணவமாகத் தோமற்றமளிக்கிறது.

Monday, September 20, 2010

யோகா




யோகா என்பது தலைகீழாக நிற்பதோ, பல கோணங்களில் உடலை வளைப்பதோ அல்ல. அது யோகாசனம். அது யோகாவில் ஒரு சிறு பகுதி. அவ்வளவு தான்!

யோகா என்றால், வித்தியாசங்களைக் களைந்து, மற்றதுடன் ஐக்கியமானது.

40 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகவே யோகப் பயிற்சி அளிக்கப்பட்டத்தற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன. 

சென்ற நூறு தலைமுறைகளில் நாகரீகங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் எத்தனையோ விதமாகப் புரண்டு விட்டன. ஆனால் யோகா சற்றும் மதிப்பிழக்கவிலை. முறையான யோகா ஒரு விஞ்ஞானம். 

பல்பு எப்படி வேலை செய்கிறது என்பதைக் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொள்ளாதவன் சுவிட்சை போட்டாலும் விளக்கு எரியும். 

யோகாவும் அதைப்போல்த்தான். கல்வியோ, கல்லாமையோ அதற்குப் பொருட்டல்ல. குறிப்பிட்ட கலாச்சாரத்திற்கோ, ஒரு மதத்திற்கோ அது அடிமை அல்ல. எந்த ஒரு குழுவையும் அது சார்ந்ததில்லை. எந்த தெய்வ நம்பிக்கையும் அதற்கு தேவையில்லை.

எதனுடனும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாத காரணத்தாலேயே யோகா தனி மகத்துவம் கொண்டிருக்கிறது. முறையான யோகா மிகச் சரியாகவே வேலை செய்யும்.

Friday, September 17, 2010

மனநிறைவு


பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப் பார்ப்பதை விடுத்து குறைவில்லாது நிறைவையே பார்க்கப் பயிற்சி கொடுத்க் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் அமைந்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள். இதையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே! ஏதேனும் ஒரு குறைபாட்டை நாமாக கற்பித்துக் கொண்டு அது இல்லையே என்று துன்பப்படுவதை விட்டுவிட வேண்டும்.

இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் இந்தக் குறைபாடு களைந்து நிறைவை ஏற்படுத்திக் கொண்டு மனநிறைவாக வாழ்வதற்கு இறை உணர்வும், உயிர் உணர்வும் வேண்டும். அந்த உயிர் உணர்வைப் பெறுவதற்கு தவம் இருக்கிறது. அற உணர்வை பெறுவதற்கு நல்ல செயல்கள் செய்யச் செய்ய தானாகவே அது மலர்ந்துவிடும். அந்த முறையில் எப்பொழுதும் யாருக்கு என்ன நன்மை செய்யலாம் என்று அதைச் செய்யத் தயாராகும் முறையில் நீங்கள் வந்துவிட்டீர்களானால், அதுவே தான் எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டு.

நேரடியாக நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்றால் இறைவன் ஒவ்வொரு உள்ளத்திலும் இருந்து கொண்டு எங்கு தேவையோ அதை அங்கு போய் உதவி செய்து முடிக்கிற அளவுக்கு உதவி செய்ய வேண்டும். வாழ்க்கையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருவதற்கு இதற்கு ஈடான மார்க்கம் பிறிதொன்றும் இல்லை. 

Tuesday, September 14, 2010

நாம் நினைப்பது எப்படி நடக்கிறது?


விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருச்ச்ந்தாலும்,  அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்சிகளை ஒரே நேரத்தில் ஒலிப்பரப்புகின்றன.  நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்: எங்கே போனாலும் நம்க்கு வெற்றியாகவே இருக்கும்.


அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்த தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. “நம்மை திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, “என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்த காலத்தில் எந்தச்சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அதுதானாகவே நடந்துவிடும்.

முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு (Collective Knowledge).அதனால், அந்த இடத்திருந்து நாம் எண்ணி எண்ணத்திற்க்குரிய காலமும் வேகமும் வரும் போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

Wednesday, September 1, 2010

எண்ணம், சொல், செயல்


மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் எற்பட்ட பதிவுகளின் மூலம் செயல் படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல் அனத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தன்க்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும் பெற்று இருக்கின்றான். ஆகவே மனதின் நிலைமைக்கேற்ப அவனிடம் இருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடு உடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனை பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடம் இருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையை பொறுத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேருன்ற செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாக பதிந்து நம் குணங்களை தீய பதிவுகள் கட்டு படுத்துமாறு ஆகிவிடுகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.



பி.கு: இது லதா படிக்கும் முதுகலை பட்டய படிப்பு “யோகாவும், மனித மாண்பும்” என்ற புத்தகத்தில் இருந்து தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :))) கீழே இருக்கும் படத்திற்கும் பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))

Tuesday, August 31, 2010

ஐந்து அளவு முறை


உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலே சாப்பிட்டு கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப்போக்கு என்றாகும். மருத்துவரிடம் போனால், நோய்க்கு மருந்து கொடுப்பார். குணமான மறுதினமே மீண்டும் அளவுக்கு அதிகமான உணவை நாடி போனால், வாழ் நாள் முழுவதும் மருத்துவர் - மருந்து - வயிற்று போக்கு என்ற நிலை எற்பட்டால் வாழ்கை என்ன ஆகும்?  வேறு எந்த காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளவும். அதே போல் எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுப்பட்டால் உடல் வலுவிழந்து போகிறது: உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வும் சீர்ரழிகிறது.  நாம் கெடுகிறோம், குடும்பம் பாதிக்க படுகிறது, சமுதாயமும் தப்புவதில்லை.

ஐயுணர்வோடு, மெய்யுணர்வு இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறது என்றால், உறவிலேயே ஒரு தெளிவு. அதாவது Detachment  in attachment வருகிறது. இதுதான் உறவிலே துறவு நிலை.  இது அல்லாது துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு போவது தான் துறவு என்றால் இறப்பவர்கள்தான் துறவு நிலைக்கு போகிறார்கள் என்று சொல்லாம்! நாம் வாழும் போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமைய வேண்டுமே தவிற, நாம் இறந்த பிறகு துறவானால், மேன்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலும் எல்லை கட்டி கொள்ள வேண்டும்: 1. உணவு 2. உழைப்பு 3. உறக்கம் 4. உடலுறவு 5. எண்ணம் இவை அனைத்திலும் அளவு இட்டு எல்லையை நிர்ணையித்துக் கொள்ள வேண்டும்.

பி.கு: இது லதா படிக்கும் முதுகலை பட்டய படிப்பு “யோகாவும், மனித மாண்பும்” என்ற புத்தகத்தில் இருந்து தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :)))

Monday, August 30, 2010

"குரு" வும் "வாழ்க வளமுடன்" வாழ்த்தின் பயனும்

குரு ஒரு வழிகாட்டி.  தவத்தை குரு மூலம்தான் பெற்று பழகுதல் வேண்டும், என்றாலும் குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என எண்ண வேண்டாம்.  அது உங்களுடைய வினையின் பதிவுதான், நீங்கள் செய்த கருமத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதை பெற வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க ஓங்க உங்களது மனதின் ஊடே உள்ள அந்த சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.  அந்த நேரத்திற்கு வருபவரை குரு என கொள்கிறீர்கள்.

”வாழ்க வளமுடன்” 

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தால் அன்றி வாழ்த்தவே முடியாது, அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும் போது மனதுக்கு ஒரு  வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுறுவி நிறைந்து அந்த உயிர்கலப்பு ஏற்படகூடிய நிலை, இவை எல்லாம் அதிகம் ஆகும்.


அந்த நுண்ணிய நிலையில் நாம் வாழ்த்து கூறும் போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டு பேருடைய அடித்தளமான அந்த உயிர் நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (Interaction) ஏற்படுகின்றது; ஊடுறுவி பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை, நாலுதடவை, செய்ய செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால் அது எப்போழுதும் நமக்கு அலைவீசிக் கொண்டு இருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்பு படி வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கும்; அந்த் தொடர் அறுபடாது இருக்கும். அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டி நினைப்பது, அவர்கள் நன்மைக்கா நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றி விட முடியும்; அவர்களுடைய செயல்களை திருத்தி விடமுடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றி விட முடியும்.


தவம் முடித்ததும் வாழ்த்த வேண்டும்.  தவத்தில் இருக்கும் போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் ”அல்ஃபா அலை” அதிர்வுக்கு வந்து விடுகிறோம், அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்து விடும். அந்த இடத்தோடு அங்கே இருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம்.


வாழ்க வளமுடன்” எனற எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது. அம்பு இருக்கிறது. அடுதது அம்பு எய்வதற்கு ஒரளவு நாணை பின்னுக்கு இழுத்து விடுவது ஒன்று, கடைசி வரைக்கும் நாணை இழுத்து அம்பு விடுவது என்பது வேறு. எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதை கொண்டு வருகிறோமோ அங்கே இருந்து கொடுக்க கூடிய வாழ்த்துக்கோ, அல்லது சாபத்திற்கோ கூட வேகம் அதிகம், செய்லபடும் வேகமும் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த வேகத்தில் நாம் சொல்ல கூடிய சொல்லுக்கு, எண்ணக்கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்;  சீக்கிரமாக செயலுக்கும் வந்து விடும்.  நமக்காக என்னென்ன வேண்டுமோ அதை செயல் படுத்துவதற்கு சில நாட்களானாலும் சரி, பிறகுக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.